செய்திகள்
அமித்ஷா

அமித்ஷா 21-ந் தேதி சென்னை வருகை - பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

Published On 2020-11-15 18:43 GMT   |   Update On 2020-11-15 18:47 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி சென்னை வருகிறார். பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (ஏப்ரல் மாதம்) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அவர், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அரசு நிகழ்ச்சி முடிந்தவுடன் அமித்ஷா, தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். மேலும் அவர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனியாக சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அவரையும் சந்தித்து அரசியல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷா அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தாலும், அவரது வருகையின் முக்கிய நோக்கமே தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிவாய்ப்பை தேடி தருவதற்கும், பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடுவதற்கான வியூகங்கள் அமைப்பதற்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அமித்ஷா, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகை சென்று சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்றும், தனது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் முடிந்து அன்றைய தினமே டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷா பங்கு பெறும் கட்சி நிகழ்ச்சிகள் தனியார் மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Tags:    

Similar News