செய்திகள்
அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் - கமல்ஹாசன்
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், நன்றி தெரிவித்துள்ள கமல், அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது 66 வது பிறந்தநாளை கடந்த 7-ம் தேதி கொண்டாடினர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள கமல், அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது: "என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பிறந்தநாளை 'நற்பணி' தினமாக கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.