செய்திகள்
புதுச்சேரியில் சாலை வரி தள்ளுபடி - ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஊரடங்கின்போது இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி சமீப காலமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் அதற்கான சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைக்காக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கின்போது இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.
சரக்கு வாகனங்களுக்கு 2 மாதமும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் வரிச்சலுகை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். வரிச்சலுகையால் ஏற்படும் ரூ.21 கோடி இழப்பை கூடுதல் நிதி ஆதாரம் மூலம் சரி செய்யப்படும் என கிரண்பேடி கூறியுள்ளார்.