செய்திகள்
பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?- ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி
பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை:
போதிய பாதுகாப்பு இல்லாமல் திருமங்கலம், உசிலம்பட்டியில் பட்டாசு நிறுவனங்கள் செயல்படுவதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்ககோரியும் மதுரையை அடுத்த திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
அவை, பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது, இந்த தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. தமிழகத்தில் எத்தனை பட்டாசு ஆலைகள் உள்ளன?. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர்?. பட்டாசு விபத்துகளில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கி உள்ளதா?.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் என்ன ஆலைகள் அமைக்கலாம் என்பதை மத்திய மாநில அரசுகள் தெரிவிக்க உத்தரவிட்டு வருகிற டிசம்பர் 4-ந் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.