செய்திகள்
சுரேஷ்- கொலையுண்ட கார்த்திகேயன்.

கபிஸ்தலம் அருகே அண்ணனை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

Published On 2020-11-08 10:45 GMT   |   Update On 2020-11-08 10:45 GMT
கபிஸ்தலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன்கள் கார்த்திகேயன்(வயது 25), சுரேஷ்(24). இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சலவை தொழிலாளியான கார்த்திகேயன், தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அக்கம் பக்கத்தினரிடம் கார்த்திகேயன் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அவரது தம்பி சுரேஷ், ஏன் தினமும் குடித்து விட்டு வந்து அக்கம், பக்கத்தினரிடம் தகராறு செய்கிறாய்? என்று அண்ணனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து சுரேசை வெட்டினார். அப்போது சுதாரித்துக்கொண்ட சுரேஷ், கார்த்திகேயன் கையில் இருந்த அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சுரேசுக்கு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News