செய்திகள்
விடிய விடிய மழை பெய்ததால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை காணலாம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை- உப்பளங்கள் நீரில் மூழ்கின

Published On 2020-11-07 01:59 GMT   |   Update On 2020-11-07 01:59 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் நீரில் மூழ்கின.
நெல்லை:

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இந்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழை நேற்று காலை 9 மணி வரை நீடித்தது. நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால், தோண்டப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகள் சகதிக்காடானது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காடு பகுதியில் 73.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. தென்காசியில் 52.40, செங்கோட்டையில் 43 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலை 9 மணி வரை நீடித்தது. ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் சாரலாக பெய்து கொண்டே இருந்தது.

தூத்துக்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 46 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
Tags:    

Similar News