செய்திகள்
குமரி கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றுக் கொண்டதை காணலாம்

குமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்

Published On 2020-10-30 05:30 GMT   |   Update On 2020-10-30 05:30 GMT
குமரி மாவட்ட புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் அரசுத்துறை நிர்வாகத்தில் சில அதிரடி இடமாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் பல்வேறு கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். குமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரசாந்த் வடநேரேவும், தற்போது தமிழ்நாடு மின்வினியோக கழக இணை மேலாண்மை இயக்குனராக (நிதி) மாற்றப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து நிதித்துறை இணை செயலாளராக இருந்த அரவிந்த், குமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 51-வது கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்று கொண்டார். முன்னாள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அரசு சார்ந்த ஆவணங்களை, புதிய கலெக்டர் அரவிந்திடம் ஒப்படைத்தார்.

மேலும் மாவட்ட வழங்கல் அலுவலக துணை வட்டாட்சியராக பணியாற்றிய ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்கும் வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றார். இதற்கான அரசாணையை ரவிச்சந்திரனிடம், கலெக்டர் அரவிந்த் வழங்கினார். இதில் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் கண்ணன், வட்டாட்சியர்கள் சுப்பிரமணியன் (பேரிடர் மேலாண்மை), கண்ணன் (நத்தம் நிலவரித்திட்டம்) உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இதற்கு முன்பு நான் சிதம்பரத்தில் சப்-கலெக்டராக பணியாற்றினேன். பின்னர் நிதித்துறை இணை செயலாளராக இருந்துள்ளேன். தற்போது முதல் முறையாக தென்மாவட்டத்தில் கலெக்டராக பொறுப்பேற்று உள்ளேன். குமரி மாவட்டத்தில் உள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு என்ன? என்ன? செய்யலாம் என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் மற்றும் முன்னாள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தலைமையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News