செய்திகள்
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

Published On 2020-10-23 01:50 GMT   |   Update On 2020-10-23 01:50 GMT
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:

சென்னையில் நேற்று மாலையில் பெய்த திடீர் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதேபோல், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் இயக்குனர் அலுவலகம், மருத்துவ நிலைய அதிகாரி மற்றும் ரத்த வங்கி இருக்கும் பகுதிகள் வழியாக மழை நீர் உள்ளே புகுந்தது. அதன் பின்னர் நோயாளிகள் இருக்கும் வார்டு அறைகள் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர் தூக்கிக்கொண்டு மழைநீரில் நடந்தபடி சென்ற அவலமும் அரங்கேறியது. இதையடுத்து மருத்துவமனையில் பொதுப்பணித்துறை பிரிவு அதிகாரிகள் உடனடியாக வந்து பார்வையிட்டனர். தேங்கி கிடந்த மழைநீரை அகற்றும் பணியை அவர்கள் துரிதப்படுத்தினர்.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் எழிலரசி நிருபர்களிடம் கூறுகையில், ‘மழைநீர் செல்லும் வழியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கி மருத்துவமனைக்குள் புகுந்துவிட்டது. வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது’ என்றார்.
Tags:    

Similar News