செய்திகள்
கோப்பு படம்

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published On 2020-10-22 10:29 GMT   |   Update On 2020-10-22 10:29 GMT
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 

நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

ஜெய்சுகின் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு உள்ஒதுக்கீட்டு மசோதாவுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க காலக்கெடு எதுவும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News