செய்திகள்
கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

சூலூர் அருகே கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

Published On 2020-10-21 09:33 GMT   |   Update On 2020-10-21 09:44 GMT
சூலூர் அருகே கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்த கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சூலூர்:

சிவகங்கை மாவட்டம் தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 21). இவர் தற்போது கோவை சூலூர் அருகே தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று நரேஷ் குமார் தனது அறையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

இந்த நிலையில், போலீசார் சூலூர் அடுத்த சங்கோதிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 பேரை சந்தேகத்தின் பேரில், பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை தி.நகரை சேர்ந்த கவுதம் (22), கண்ணம்மாபேட்டையை சேர்ந்த விஜயபிரசாந்த் (22), வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் 3 பேரும் சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் செல்போன்களை பறித்து வந்த கும்பல் என போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இவர்கள் தான் நரேஷ் குமாரின் செல்போனையும் திருடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

3 பேர்களும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல திருட்டு வழக்கில் தொடர்புடையதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News