செய்திகள்
வாணியம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்.

விழுப்புரம் பகுதியில் சாமந்தி பூ விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

Published On 2020-10-20 08:08 GMT   |   Update On 2020-10-20 08:08 GMT
விழுப்புரம் பகுதியில் சாமந்தி பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வாணியம்பாளையம், சுந்தரிப்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனூர் உள்ளிட்ட கிராமங்களில் சாமந்தி பூக்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். எல்லா காலங்களிலும் பூக்கும் பூ என்பதால் மற்ற பூக்களை காட்டிலும் இதனை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பூக்கள் தற்போது நன்கு பூத்து குலுங்குவதால் பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள பூக்களை அதிகாலையில் பறித்து விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளுக்கு மாலைகளாக கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் வாகன போக்குவரத்து முடக்கம் காரணமாக பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டதால் அவை அழுகி வீணாகியது.

இன்னும் சிலரது பூந்தோட்டம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது. இதனால் பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் சாமந்தி பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ தற்போது விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாகுபடிக்கான முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப பெற முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வாகன போக்குவரத்து முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவில் திருவிழாக்கள், சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக நாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமலும், போதிய வருமானமின்றியும் தவித்து வருகிறோம்.

இந்த சூழலில் திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெற்று வருவதாலும், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதாலும் பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடிவதில்லை. அதன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சாமந்தி பூ சாகுபடி செய்யும் எங்களை போன்ற விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே விழுப்புரம் பகுதியில் சந்தை அமைத்து பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்தால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
Tags:    

Similar News