செய்திகள்
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை- குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-10-15 01:54 GMT   |   Update On 2020-10-15 01:54 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவில் விடிய, விடிய பரவலான மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் 89.15 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 94.30 அடியாக இருந்தது.

மற்றொரு அணையான சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.58 அடியாக இருந்தது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 113.48 அடியை எட்டியது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.80 அடியாக உள்ளது. கடனாநதி அணையில் 76.70 அடியும், ராமநதி அணையில் 76.50 அடியும், கருப்பாநதி அணையில் 68.02 அடியும் தண்ணீர் உள்ளது. குண்டாறு, அடவிநயினார் அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. நேற்று காலையில் இருந்தே குற்றாலம் பகுதியில் மழை பெய்து வந்தது. வெயிலே இல்லை. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதே போன்ற பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க போலீசாரிடம் அனுமதி கேட்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை மட்டும் பார்த்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. கடையம், மணிமுத்தாறு, ராதாபுரம், களக்காடு, தென்காசி, ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதியில் நேற்று காலையில் பரவலான மழை பெய்தது. நெல்லை புதிய பஸ் நிலையம், வண்ணார்பேட்டை, குலவணிகர்புரம் பகுதியில் காலையில் சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-64, சேர்வலாறு-42, மணிமுத்தாறு-17, கொடுமுடியாறு-60, அம்பை-3 சேரன்மாதேவி-3, நாங்குநேரி-4, பாளையங்கோட்டை-2, நெல்லை-3, களக்காடு-6, மூலைக்கரைப்பட்டி-5, கடனாநதி-17, ராமநதி- 40, செங்கோட்டை-11, சிவகிரி-2, தென்காசி -32.
Tags:    

Similar News