செய்திகள்
சென்னை விமான நிலையம்

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் 3 கிலோ தங்கம் கடத்தல்

Published On 2020-10-13 02:01 GMT   |   Update On 2020-10-13 02:01 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பேரும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் என 3 பயணிகள் மீது சந்தேகம் கொண்டு அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இதுதொடர்பாக 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News