செய்திகள்
இசக்கிதுரை (பழைய படம்)

அம்பை அருகே காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை- 2 பேர் கைது

Published On 2020-10-09 08:44 GMT   |   Update On 2020-10-09 08:44 GMT
அம்பை அருகே காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முப்பிடாதி. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுடைய மகன் இசக்கிதுரை (வயது 17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இசக்கிதுரை கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து தாயார் முப்பிடாதி அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வரும் 18 வயதான வாலிபர் மற்றும் 15 வயதான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஆகிய 2 பேருடன் கடந்த 6-ந்தேதி இசக்கிதுரை வெளியே புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கொலையான இசக்கிதுரையுடன் பாளையங்கோட்டையைச் சேர்ந்த இறைச்சி கடை தொழிலாளியான 18 வயதான வாலிபர் மற்றும் 15 வயதான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்தனர். இதில் அந்த தொழிலாளியின் உறவினர்கள் கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். இதனால் அவர் கடந்த 6-ந்தேதி தன்னுடைய நண்பர்களான இசக்கிதுரை, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஆகியோரிடம் கல்லிடைக் குறிச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வோம் என்று கூறி அழைத்து சென்றார்.

பின்னர் அவர்கள் 3 பேரும் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு, அங்குள்ள ஆற்றுப்பாலம் அருகில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டத்திற்கு சென்று மது குடித்தனர். அப்போது ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளியும், எஸ்.எஸ். எல்.சி. மாணவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இசக்கிதுரையின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த 2 பேரும் சேர்ந்து இசக்கிதுரையின் உடல் மீது இலைகள், புதர் செடிகளை போட்டு மூடி மறைத்து விட்டு சென்று விட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இறைச்சி கடை தொழிலாளி, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று அந்த தோட்டத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள், இசக்கிதுரையின் உடலை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காட்டினர். அங்கு தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.

அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் (பாளையங்கோட்டை), சகாயசாந்தி (கல்லிடைக்குறிச்சி) மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இசக்கிதுரையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

அம்பை அருகே காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News