செய்திகள்
ஜிகே வாசன்

உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2020-10-06 06:18 GMT   |   Update On 2020-10-06 06:18 GMT
விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

“காலத்தே பயிர் செய்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் விவசாயப்பணியை தொடங்கினாலும், பயிர் செழித்து வளர வேண்டுமென்றால் அதற்கான முறையான உரங்கள் இட வேண்டும்.

அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில், உரங்கள் வேளாண் விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை. அதனால் உழவுப் பணியை தொடங்கினாலும் தொடர் பணி முற்றுபெறாமல் இருக்கிறது.

விவசாயிகளின் அவசரத் தேவையையும், உரத்தட்டுப் பாட்டையும் தனியார்துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாய செலவிற்கு இடையில் உரம் தட்டுப்பாடாலும், விலையேற்றத்தாலும், விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்படும்.

தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணி துவங்கப்பட்டுள்ளது.

ஆகவே அவற்றின் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு காலதாமதம் இன்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும். முன்னேற்பாட்டுடன் அனைத்து வேளாண் விற்பனை மையங்களிலும் விவசாய இடுபொருள்கள், பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News