அ.தி.மு.க.விடம் கணிசமான தொகுதிகளை பா.ஜனதா பெறும்- நயினார் நாகேந்திரன் பேட்டி
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், வர லாற்று சிறப்புமிக்க ராஜபாளையம் சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்து மறைந்த தியாக பூமி.
இப்பூமியில் பா.ஜ.க. எதையும் எதிர்பாராமல் சேவை செய்யும். இப்பூமியில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு பூத் கமிட்டி வேலையை சரியாக பராமரித்து செய்து வந்தாலே அதிகமான வாக்குகளை பா.ஜ.க. பெறலாம் என்றார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானபண்டிதன், சோலை யப்பன், மாநில பேச்சாளர் ரேணுகாதேவி உள்பட பலர் பேசினார்கள்.
பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தொண்டர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ராஜபாளையத்தில் அதிக ஈடுபாடு உள்ள தொண்டர்கள் உள்ளனர். இங்கு பா.ஜ.க. காலூன்ற ஏற்பாடுகள் செய்வோம்.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பிரச்சினை இருக்கலாம். இது அவர்களின் உள்கட்சி பிரச்சனை. விரைவில் பிரச்சினை தீர்ந்து முடிவு ஏற்பட்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
வரும் தேர்தலில் அ.தி.மு.க.விடம் இருந்து கணிசமான தொகுதிகளை பா.ஜ.க. கேட்டுப் பெற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.