செய்திகள்
தற்கொலை

ஒரே மகன் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறியதால் தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை

Published On 2020-10-01 07:40 GMT   |   Update On 2020-10-01 07:40 GMT
ஒரே மகன் வெளிநாட்டுக்கு படிக்க செல்வதாக கூறியதால் மனமுடைந்த கணவன், மனைவி 2 பேரும் ரெயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் தங்கமுத்து(62). தொழில் அதிபர். இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு மதன்குமார் என்ற ஒரே மகன் உள்ளார்.

தங்கமுத்து அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ், நிதிநிறுவனம், லாட்ஜ் உள்ளிட்டவை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தங்கமுத்துவின் மகன் மதன்குமார் மேல்படிப்பு படிக்க வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கு தங்கமுத்துவும், அவரது மனைவியும் மறுப்பு தெரிவித்தனர்.

நீ எங்களுக்கு ஒரே மகன். உன்னை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு நாங்கள் இங்கே தனியாக இருக்க முடியாது. எனவே நீ அங்கே சென்று படிக்க வேண்டும். இங்கேயே படி என்று கூறியுள்ளனர். ஆனால் தங்கமுத்துவின் மகன் பெற்றோரின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து வெளிநாட்டிற்கு செல்வதாகவே கூறி வந்தார்.

இதனால் தங்கமுத்துவும், அவரது மனைவி ராதாமணியும் கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்துடன் காணப்பட்டனர். மகன் தங்களது பேச்சை கேட்காததால் விரக்தியடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று இரவு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் தாராபுரத்தில் இருந்து காரில் திருப்பூர் வஞ்சிபாளையம் நோக்கி வந்தனர்.

வஞ்சிபாளையம் பகுதியில் வந்ததும் காரை நிறுத்தி விட்டு கணவன், மனைவி 2 பேரும் இறங்கி அங்குள்ள தண்டவாளத்தை நோக்கி நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ரெயில் வரும் சத்தம் கேட்கவே உடனடியாக விரைந்து தண்டவாளத்திற்கு சென்றனர்.

பின்னர் அந்த வழியாக வந்த ரெயில் முன்பு 2 பேரும் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் வெளிநாட்டுக்கு படிக்க செல்வதாக கூறியதால் மனமுடைந்த கணவன், மனைவி 2 பேரும் ரெயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News