செய்திகள்
குணசீலன்

பள்ளி மாணவி தற்கொலையில் திருப்பம்- ஆபாச படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய வாலிபர் கைது

Published On 2020-09-25 02:42 GMT   |   Update On 2020-09-25 02:42 GMT
பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், அவளை ஆபாசமாக படம் பிடித்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை வேளச்சேரி காந்தி சாலையை சேர்ந்த 13 வயதான மாணவி, 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

இதுதொடர்பாக பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஆபாசமான குறுந்தகவல் இருந்ததை கண்டனர். இதுபற்றி விசாரித்தபோது, அது மாணவியின் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த குணசீலன் (33) என்பவரது செல்போன் என்பதும், சகோதரர் போல் பழகி வந்ததாகவும், பள்ளி மாணவி தற்கொலைக்கு பிறகு வீட்டை காலி செய்துவிட்டு பெருங்குடி கல்லுக்குட்டை பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று அவரை தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்த செல்போனில் அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை மீண்டும் நவீன கருவி மூலம் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில் குணசீலன், மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள், ஆபாசமான வீடியோக்கள் இருந்ததை கண்டனர். கடந்த 3 மாதங்களாக தரமணி போலீசார் தேடிவந்த குணசீலன், வால்பாறையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின்பேரில் தரமணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி தலைமையிலான தனிப்படையினர் வால்பாறை சென்று குணசீலனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

போலீசாரிடம் குணசீலன் கூறியதாவது:-

பள்ளி மாணவிக்கு படிப்பு சம்பந்தமாக டியூசன் எடுத்து வந்தேன். அப்போது மாணவியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டேன். மாணவியை ஆபாசமாக படங்கள், வீடியோக்களை எடுத்தேன். பின்னர் அதை மாணவியிடம் காட்டி எனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன்.

மறுத்தால் ஆபாச படம், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டினேன். இது பற்றி பெற்றோரிடம் தெரிவிப்பதாக மாணவி கூறியதால், மாணவியின் தாயார் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினேன். இதை பார்த்த மாணவி, அதை அழித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றிய போலீசார், கைதான குணசீலனிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News