செய்திகள்
மீட்கப்பட்ட குழந்தை

ஸ்ரீரங்கத்தில் தொப்புள் கொடியுடன் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

Published On 2020-09-24 11:41 GMT   |   Update On 2020-09-24 11:41 GMT
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளங்குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, செப்.24-

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர் பகுதி ஒன்றில் பிக் ஷாப் பை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் சென்றவர்கள் குழந்தை சத்தம்  கேட்டதைத் தொடர்ந்து, உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து, அந்த பையை சோதனையிட்டனர். அப்போது பிக் ஷாப் பைக்குள் வெள்ளை துணியை மூட்டைபோல கட்டி, அதனுள் குழந்தை இருப்பது தெரிந்தது. துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் தொப்புள் கொடிகூட வெட்டப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கள்ளக்காதல் காரணமாகவோ அல்லது காதலன் விட்டு சென்றதால் கர்ப்பமாகி குழந்தை பெற்றதன் காரணமாக பெற்ற குழந்தையை அப்பெண் கொலை செய்ய மனமின்றி, துணிமூட்டையில் பாதுகாப்பாக வைத்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இருப்பினும் குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பெண் யாருக்காவது குழந்தை பிறந்து வெளியேறி இருக்கிறார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News