செய்திகள்
தற்கொலை முயற்சி

காதலியை பெற்றோர் அழைத்து சென்றதால் கலெக்டர் அலுவலகத்தில் வி‌ஷ மாத்திரை சாப்பிட்ட வாலிபர்

Published On 2020-09-23 09:19 GMT   |   Update On 2020-09-23 09:19 GMT
காதலியை பெற்றோர் அழைத்து சென்றதால் கலெக்டர் அலுவலகத்தில் வி‌ஷ மாத்திரை சாப்பிட்ட வாலிபர் மதுரையில் பரபரப்பு திண்டுக்கல் முக்கியம்

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 24). தனியார் நிறுவன ஊழியரான இவர், திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணை அழைத்து வந்து மேலூரில் 3 மாதமாக தன்னுடன் தங்க வைத்துள்ளார்.

மகளை காணாத பெற்றோர், சில நாட்களுக்கு முன்பு தேடி கண்டுபிடித்து பெண்ணை அழைத்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக பாண்டியராஜன் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மனு கொடுப்பதற்காக பாண்டியராஜன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது திடீரென்று தான் வைத்திருந்த மாத்திரைகளை உடைத்து வாயில் போட்டு சாப்பிட்டார்.

“காதலியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறியபோதுதான் அவர் சாப்பிட்டது, எலி வி‌ஷ மாத்திரைகள் என தெரியவந்தது.

இதுகுறித்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News