செய்திகள்
பதவி தராததால் கொடிக்கம்பத்தை எடுத்து சென்ற பா.ஜ.க. நிர்வாகி - ஏலகிரிமலையில் பரபரப்பு
ஏலகிரிமலையில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவருக்கு கட்சியில் பதவி கொடுக்காததால் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை அத்தனாவூர் பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் பா.ஜ.க.வின் கொடி ஏற்றி பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் அங்குள்ள கட்சி நிர்வாகி ஒருவர் தனக்கு கட்சியில் உயர் பதவி கொடுக்கவில்லை என்பதால் பெரியார் சிலைக்கு அருகில் நட்டு வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை எடுத்து சென்றுவிட்டார்.
இதையறிந்த அங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் இதுகுறித்து ஏலகிரிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கொடிக்கம்பத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் திட்டமிட்டப்படி அதே இடத்தில் பெரியார் சிலைக்கு அருகில் பா.ஜ.க. நிர்வாகிகள் கொடியேற்றினர்.