எர்ணாகுளத்தில் கல்குவாரியில் வெடி விபத்து- சேலம் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்:
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் மலையாற்றூர் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது.
இக்குவாரியில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் வேலை செய்து வருகிறார்கள். இங்குள்ள ஒரு அறையில் வெடிபொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த அறையில் இருந்த வெடிபொருள்கள் திடீரென வெடித்து சிதறியது.
வெடி சத்தம் கேட்டதும் குவாரியில் இருந்த தொழிலாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர். என்றாலும் குவாரியில் இருந்த 2 தொழிலாளிகள் வெடிவிபத்தில் சிக்கி பலியானார்கள்.
இதில் ஒருவர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெரியண்ணன் என்று தெரியவந்துள்ளது. இன்னொருவர் பெயர் விபரத்தை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
வெடிவிபத்து பற்றி தெரியவந்ததும் போலீசாரும், அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.