செய்திகள்
கோவில் இடிக்கப்பட்ட போது எடுத்த படம்.

தஞ்சையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு

Published On 2020-09-20 07:24 GMT   |   Update On 2020-09-20 07:24 GMT
தஞ்சையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிக்கப்படும் தகவலை அறிந்த இந்து அமைப்பினர் அங்கு திரண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:

நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கோவில்கள் குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது புளியந்தோப்பு கிராமத்தில் 70 வீடுகள் அகற்றப்பட்டன. அந்த கிராமத்தில் மிக உயரமான சிவலிங்க வடிவில் ராஜகோபுரத்துடன் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவிலையும், அதையொட்டி உள்ள மாடி வீட்டையும் பொதுப்பணித்துறையினர் இடிக்க முயற்சி செய்தனர்.

கோவிலை நிர்வாகிகள் ஆதிமாரியம்மன்கோவிலை இடிக்க தடைவிதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிலை இடிக்க இடைக்கால தடை விதித்தார். மேலும் பொதுப்பணித்துறையினர் பதில் அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து 14 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் ஆதிமாரியம்மன் கோவில், ராமமூர்த்தி சுவாமிகள் சமாதி, வீடு ஆகியவை கட்டப்பட்டுள்ளன என ஐகோர்ட்டு கிளையில் பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையை ஏற்று 10 வாரங்களுக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆதிமாரியம்மன் கோவிலை இடிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். 3 பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் கோவிலின் சுற்றுச்சுவர், அர்த்த மண்டபம் இடிக்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் தங்கியிருந்த வீடும் இடித்து தள்ளப்பட்டது.

கோவில் இடிக்கப்படும் தகவலை அறிந்த இந்து அமைப்பினர் அங்கு திரண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், திடீரென கோவில் முகப்பில் ராஜகோபுர வடிவில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஏறிகோவிலை இடித்தால் தற்கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமாதானப்படுத்தி அவரை கீழே இறக்கினர். இரவு நேரமாகிவிட்டதால் வெளிச்சமின்மை காரணமாகவும் அலுவலர்களும், போலீசாரும் பணியை நிறுத்திவிட்டு சென்றனர். இதையடுத்து இந்து முன்னணியினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News