செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

Published On 2020-09-20 06:31 GMT   |   Update On 2020-09-20 06:31 GMT
வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்க்கு பெரியாறு கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் நிலையில், ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு, ஆற்றுப்பகுதியில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணை 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்க்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61.75 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்வு காரணமாக கடந்த மாதம் 31-ந் தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்க்கு பெரியார் கால்வாய் பகுதியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீரும்,72 கனஅடி தண்ணீர் குடிநீருக்கும் சேர்த்து மொத்தம் 972 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக விவசாயப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழையின் வேகம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வைகை அணையில் இருந்து தற்போது கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதால், ஆற்றுப்பாசனம் செய்யும் விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வைகை ஆற்றங்கரையை ஓட்டியுள்ள அணைக்கரைபட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் ஆற்றங்கரையை ஓட்டியுள்ள கிராமங்களில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து ஏற்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாவதால் ஆற்றுப்பகுதியை சுற்றியுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் பல ஏக்கரில் சாகுபடி செய்துள்ள வாழை, கத்தரி, முருங்கை, தென்னை மற்றும் மானாவாரிய பயிர்களின் விளைச்சல் கேள்விக்குறியாக உள்ளது. வைகை ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து இல்லாததால் ஆற்றுப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றுப்பாசன விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News