செய்திகள்
ஓடும் ரெயிலில் மாணவியை ஆபாச வீடியோ எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது
அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் மாணவியை ஆபாச வீடியோ எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை:
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண், கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை கடந்தபோது, மாணவி ரெயில் பெட்டியில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையின் வெளியே நின்றிருந்த வாலிபர் ஒருவர் மாணவியை செல்போனில் ஆபாச வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த மாணவி அலறி கூச்சலிட்டார். ரெயில் பெட்டியில் தூங்கிய சக பயணிகள் எழுந்து மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவியை வீடியோ எடுக்க முயன்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக மாணவி புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் பயணிகளிடமிருந்து வாலிபரை மீட்டு விசாரனை நடத்தினர். இதில் அவர் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 26) என்பதும், அந்த பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகர் என்பதும் தெரியவந்தது. மாணவியின் புகாரை பெற்ற பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேகநாதனை கைது செய்தனர்.