செய்திகள்
வேலையில் இருந்து நீக்கியதால் துணி கடைக்கு தீ வைப்பு-வாலிபர்களுக்கு வலைவீச்சு
வேலையில் இருந்து நீக்கியதால் துணி கடைக்கு தீ வைத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் புனித். இவர் சித்தூர் காந்தி மார்க்கெட் பகுதியில் துணி கடை நடத்தி வருகிறார். இவருடைய துணிக்கடையில் ஆம்பூரை சேர்ந்த 2 வாலிபர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடையின் உரிமையாளர் புனித்துக்கும் வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2 வாலிபர்களையும் உரிமையாளர் வேலையில் இருந்து நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் துணிக்கடைக்கு தீவைத்தனர்.
கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி சாம்பல் ஆனது. இது குறித்து சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடையில் வேலை செய்த ஆம்பூர் வாலிபர்கள் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.