செய்திகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி
தடை விதித்ததை மறுபரிசீலனை செய்து, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்:
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழகத்தில் வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை திருவிழாவாக நடைபெற இந்து மக்கள் கட்சி ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்த நிலையில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், வழிபடவும் தடை விதித்து உள்ளது. இந்த தடையை முதல்-அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கோவிலை திறந்தால் கொரோனா ஓடிவிடும். நாங்கள் கோவிலை திறக்க சொல்வது கூட்டம் கூட்டவோ அல்லது விழா நடத்தவோ இல்லை. அப்போது தான் பக்தர்களுக்கு நிம்மதி கிடைக்கும். டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பதால் பரவாத கொரோனா, கோவிலை திறந்தால் பரவுமா?
வி.பி.துரைசாமி இனிவரும் காலங்களில் தமிழகத்தில் தி.மு.க.-பா.ஜனதா இடையே தான் போட்டி இருக்கும் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் உண்மையில் வரும் காலங்களில் தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக அரசியல் ஒரு அணியாகவும், திராவிட அரசியல் மற்றொரு அணியாகவும் இருக்கும்.
கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக போகிறது. ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லாவிட்டால், எப்போதும் இல்லை. அதிசயம், அற்புதம் நடக்க போகிறது. ரஜினிகாந்த் தலைமையில் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் மலர போகிறது. அதில் பா.ஜனதா, இந்து மக்கள் கட்சி இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.