செய்திகள்
கைதான வேலுச்சாமி.

சொத்து விவகாரத்தில் மகனை வெட்டி கொலை செய்த தந்தை கைது

Published On 2020-08-13 07:22 GMT   |   Update On 2020-08-13 07:22 GMT
கோவை அருகே கோடரியால் வெட்டி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். சொத்து விற்ற பணத்தில் பங்கு தராததால் வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவருக்கு பழனிசாமி (40), சம்பத்குமார் (36) என 2 மகன்களும், தங்கமணி (34) என்ற மகளும் உள்ளனர்.

கார் டிரைவரான பழனிசாமி, தனது மனைவி பிரியா (36), மகன் நிஷாந்த் (9), மகள் தர்ஷினி (8) ஆகியோருடன் கொண்டையம்பாளையம் அருகே உள்ள வரதயங்கார்பாளையத்தில் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். சம்பத்குமார் மட்டும் தந்தை வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வேலுச்சாமியின் நிலத்தை விற்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முன்பணமாக ரூ.9 லட்சம் வாங்கினார்கள். அதில் பழனிசாமி, உள்பட 3 பேருக்கும் தலா ரூ.3 லட்சம் பிரித்து கொடுக்கப்பட்டது. அவர்கள் 3 பேரும் தலா ரூ.1 லட்சத்தை தந்தை வேலுச்சாமிக்கு பங்காக கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.

அதில் சம்பத்குமார், மகள் தங்கமணி ஆகியோர் தலா ரூ.1 லட்சத்தை வேலுச்சாமியிடம் கொடுத்தனர். ஆனால் பழனிசாமி மட்டும் பணத்தை கொடுக்கவில்லை. பலமுறை சென்று அவர் கேட்டும் அதற்கு பழனிசாமி கொடுக்காமல், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் அந்த பணம் செலவாகிவிட்டது என்று கூறி உள்ளார்.

இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மகன் வீட்டிற்கு சென்ற வேலுச்சாமி, பணத்தை கேட்டு உள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த பழனிசாமி, பணத்தை கொடுக்க முடியாது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, தனது தந்தை என்றும் பாராமல் அவரை தாக்கி உள்ளார். பொது இடத்தில் வைத்து மகன் தன்னை தாக்கியதாலும், தனக்கு பங்கு கொடுக்காததாலும் வேலுச்சாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பழனிசாமி தனது வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற வேலுச்சாமி, அருகில் இருந்த கிடந்த கோடரியை எடுத்து அவருடைய தலையில் ஓங்கி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேலுச்சாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News