செய்திகள்
தனுஷ்கோடி கடலின் நடுவே திடீரென சாலைபோல் உருவான மணல் பரப்பு
தனுஷ்கோடி கடல் திடீரென உள்வாங்கியதால் கடலின் நடுவே திடீரென சாலை போல் மணல் பரப்பு உருவானது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடியின் கடைகோடி பகுதியான அரிச்சல்முனையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. பலத்த காற்றும் வீசி வருகிறது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென் கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் அதே வேளையில் தனுஷ்கோடியின் வடக்கு கடலான பாக்ஜலசந்தி, சீற்றம் இல்லாமல் குளம் போலவே காட்சி அளித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று பல அடி தூரத்திற்கு கடல் திடீரென உள்வாங்கி மணல் பரப்பாக காணப்பட்டது. இதனால் பலவகை சிப்பிகளும் மணல் பரப்பில் வெளியே தெரிந்தன.
கடலின் நடுவே புதிதாக மணல் சாலை உருவானது போன்று, இந்த மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதை பார்க்க மிகவும் ரம்மியமாக அமைந்திருந்தது.
கடல் உள் வாங்கியிருந்த பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு பிறகு மணல் பரப்பு மாறி, மீண்டும் கடல்நீர் சகஜ நிலைக்கு திரும்பியது.