செய்திகள்
ஆதார் மையம் திறக்க தாமதம்- பொதுமக்கள் புகார்
காங்கேயத்தில் ஆதார் மையம் திறக்க தாமதம் ஆவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காங்கேயம்:
காங்கேயம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் இயங்குகிறது. இங்கு காங்கேயம் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் ஆதார் விபரங்களை பதிவு செய்கின்றனர். அனைத்து அரசு பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக பெறப்படுகிறது. இதனால் தினமும் பலர் ஆதார் மையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு மையத்தில் இருவர் பணிபுரிகின்றனர். நேற்றுகாலை 10.30 மணி ஆகியும் மையம் திறக்கவில்லை.
இதனால் பல்வேறு சேவைக்கு வந்திருந்த பொதுமக்கள்அவதிப்பட்டனர். பலர் சீக்கிரமாக வேலையை முடித்துச்செல்ல கிராமப்பகுதியில் இருந்து காலை 9 மணிக்கே வந்திருந்தனர். வயதானவர்களும், காலை உணவு கூட சாப்பிடாமல் காத்திருந்து தவித்தனர். பல நாட்கள் உரிய நேரத்தில் திறப்பதில்லை, இதனால் பலர் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
ஒரு நாளில் முடிக்கும் வேலையை பல நாட்கள் மையத்திற்கு வரவேண்டியுள்ளது என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ஆதார் மையம் இயங்கும் நேரம், விடுமுறை நாள் என எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் வரும் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடப்பது தொடர்கிறது. பொதுமக்கள் வசதிக்காக, ஆதார் மையத்தை தினமும் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.