செய்திகள்
கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

கொரோனா பரிசோதனைக்காக பழங்குடியின மக்களிடம் சளி, ரத்த மாதிரி சேகரிப்பு

Published On 2020-07-11 14:04 GMT   |   Update On 2020-07-11 14:04 GMT
கொரோனா பரிசோதனைக்காக பழங்குடியின மக்களிடம் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கர்ப்பிணிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலைய பகுதிகளில் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின மக்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் பஹ்கீம், வனச்சரக அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலைய பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரைக்கும் 290 பேரிடம் இருந்து சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளன. டாப்சிலிப் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வனத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 20 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பழங்குடியின மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News