செய்திகள்
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை படத்தில் காணலாம்.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

Published On 2020-07-06 02:38 GMT   |   Update On 2020-07-06 02:38 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
தென்காசி:

கொரோனா வைரஸ் மனிதர்களின் வாழ்க்கையை மட்டும் அல்ல சுற்றுலா தலங்களையும் புரட்டிப்போட்டு உள்ளது. இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதை அனுபவிப்பதற்காக தென்காசி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த மாதம் தொடங்கியது. அன்று முதல் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று குற்றாலத்தில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே இதமான வெயிலும் அடித்தது. ஆனால் ஊரடங்கினால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் அருவிக்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News