செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் அடித்துக்கொலை- 5 பேர் கைது

Published On 2020-07-06 02:20 GMT   |   Update On 2020-07-06 02:20 GMT
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகன் செல்வமோகன் (வயது35). டிராக்டர் டிரைவர். திருமணமானவர். இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி செல்வமோகன் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் காயங்களும் இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டீஸ்வரம் போலீசார் அவருடைய உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பட்டீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி முனீஸ்வரமுரளி புகார் அளித்தார். அதன் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் செல்வமோகனுக்கும், கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த கூலித்தொழிலாளியை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் கூலித்தொழிலாளியின் 17 வயது மகளுக்கு செல்வமோகன் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததும், இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த கூலித்தொழிலாளி, அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் 5 பேர் கடந்த 1-ந் தேதி செல்வமோகனை பட்டீஸ்வரம் அருகே உள்ள உள்ளிக்கடை என்ற இடத்துக்கு வரவழைத்து கண்டித்தது தெரியவந்தது.

அப்போது நடந்த தகராறில் சிறுமியின் குடும்பத்தினர் 5 பேர் செல்வமோகனை அடித்துக்கொலை செய்து, கை, கால்களை கட்டி உடலை ஆற்றில் வீசியது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News