செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.

திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் விதிகளை மீறி கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-07-04 06:38 GMT   |   Update On 2020-07-04 06:38 GMT
தர்மபுரி மாவட்டத்தில் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் விதிகளை மீறி கூட்டம் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:-

அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இணைந்து பொதுமக்கள் முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து ஒலிபெருக்கி மூலம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய 8 வட்டார மருத்துவ அலுவலக தலைமையிடங்களிலும் கொரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்க விரைவில் கருவிகள் அமைக்கப்படும். திருமண விழாக்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் விதிமுறையை மீறி அதிக அளவில் பொதுமக்கள் கூட்டமாக கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராமமூர்த்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி இளங்கோவன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு டாக்டர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News