செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை தோப்பூரில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மருத்துவமனை பணிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கிடையே மருத்துவமனை சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கென மத்திய அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய அரசிதழில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் உலக நிதி நிறுவனமான ஜிக்கா கமிட்டி மதுரை எய்ம்ஸ்க்கு கடனுதவி வழங்க முன்வந்தது. இக்கமிட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்து, கட்டுமான இடங்களை பார்வையிட்டு திருப்தி தெரிவித்ததுடன், வரும் செப்டம்பர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை எம்பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார். இது மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு வாய்ந்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மதுரை எய்ம்ஸ் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், ஜிக்கா நிதி நிறுவனம் கடன் தொகையை விடுவித்ததில் இருந்து 45 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.