செய்திகள்
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி.

சென்னை போலீஸ் கமிஷனர் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசினார்

Published On 2020-07-04 01:43 GMT   |   Update On 2020-07-04 01:43 GMT
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றவுடன் தனது கனவு திட்டத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிவித்த முதல் திட்டமான பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை:

சென்னை போலீசில் இதுவரை இல்லாத வகையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் புதிய திட்டம் தொடங்கி உள்ளார். ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்டறிய போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை நேற்று உடனடியாக செயல்படுத்தி விட்டார். வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் வீடியோ காலில் பேசுவதற்கு அவர் நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று பொதுமக்கள் 35 பேர்களிடம் ‘வீடியோ கால்’ வழியாக பேசி குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் சொன்ன குறைகளை அவர் அமைதியாக கேட்டு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். பொதுமக்கள் சொன்ன குறைகளில் திருட்டு, ‘ஆன்-லைன்’ மோசடி, நில அபகரிப்பு, கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை, காசோலை மோசடி போன்றவை தான் அதிகமாக காணப்பட்டது. சிலர் இ-பாஸ் கேட்டனர். சிலர் ஊரடங்கில் தங்களுக்கு உள்ள தொல்லைகள் குறித்து கமிஷனரிடம் எடுத்து கூறினார்கள். இது நல்ல திட்டம் என்று கமிஷனருக்கு பொதுமக்களில் சிலர் பாராட்டு தெரிவித்தனர்.

பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம்.

மற்ற நேரங்களில் இந்த நம்பரில் பேச வேண்டாம் என்றும், அப்படி பேசினால் தொடர்பு கொள்ள முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News