செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ்

15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்

Published On 2020-07-02 00:26 GMT   |   Update On 2020-07-02 00:26 GMT
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு கணேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பின் (இரவு 1 மணியளவில்) தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை வரும் 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் அப்போது ரகு கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News