செய்திகள்
கேஎஸ் அழகிரி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

Published On 2020-06-27 14:55 GMT   |   Update On 2020-06-27 14:55 GMT
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 29ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை:

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்திய மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ள நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மக்களுக்கு 
பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 29ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

மேலும் முழு முடக்க விதிகளுக்கு உட்பட்டு சமூக விலகலைக் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News