செய்திகள்
சேலம் ராணுவ வீரர் மதியழகன் உடல்

பாக். எல்லையில் துப்பாக்கி சூட்டில் பலியான சேலம் ராணுவ வீரர் உடல் சித்தூர் வந்தது

Published On 2020-06-06 14:49 GMT   |   Update On 2020-06-06 14:49 GMT
பாக். எல்லையில் துப்பாக்கி சூட்டில் பலியான சேலம் ராணுவ வீரர் மதியழகன் உடல் சேலம் அருகே உள்ள சித்தூருக்கு வந்தது.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெற்றிலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 40).

இவர் இந்திய ராணுவத்தில் அவில்தார் பதவி வகித்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் ரஜோர் மாவட்டத்தில் உள்ள சுந்தர் பணி படை பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பீரங்கி படையில் பணியாற்றி வந்தார்

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த காயம் அடைந்த மதியழகனை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் அங்கு உயிர் இழந்தார். மதியழகன் மரணம் அடைந்ததால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த மதியழகன் உடல் தனி விமானம் மூலம் நேற்று டெல்லி கொண்டுவரப்பட்டது. அங்கு இந்திய வடக்கு பிராந்திய தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ்குமார் ஜோஷி மற்றும் அதிகாரிகள் மதியழகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக வீரர் மதியழகனின் உடல் சேலம் அருகே சித்தூருக்கு வந்தது.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மதியழகன் உடல் சாலை வழியே எடப்பாடி சித்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. அப்போது மாவட்ட கலெக்டர் ராமன், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், உறவினர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இதற்கிடையே வீரமரணம் அடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

1999-ம் அண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்த மதியழகன் 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தமிழரசி (34)என்ற மனைவியும் ரோகித் (12) என்ற மகனும், சுபஸ்ரீ (8) என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News