தாண்டிக்குடியில் மலைச்சாலைகளில் செல்வதற்கு ஏற்ற சிறிய ரக ஆம்புலன்ஸ்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளன. இங்கே அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பெரும்பாறை, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, கும்பரையூர், பூலத்தூர் உள்பட 60-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. மலைப் பகுதி சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளன. இதனால் பெரிய 108 ஆம்புலன்சில் பிரசவம், அவசர சிகிச்சை நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது.
மேலும் கிராமசாலைகளும் மிகவும் குறுகியதாக உள்ளதால் இந்த ஆம்புலன்ஸ் சென்று வர மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மலைப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சிறிய 108 ஆம்புலன்ஸ் மலைப்பகுதிக்கு புதியதாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.