செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் விழுந்து மூதாட்டி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ.ராமலிங்கபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள்(வயது 78). அவர் அந்த பகுதியில் உள்ள பழைய வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பழைய சுவர் இடிந்து எல்லம்மாள் மீது விழுந்தது. இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாட்டில் சிக்கிய எல்லம்மாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்த தகவல் அறிந்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி, அந்தோணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி, எல்லம்மாளை பிணமாக மீட்டனர். மேலும் வன்னியம்பட்டி போலீசார், எல்லம்மாள் உடலை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர் இடிந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.