கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காத பயணிகள் திருப்பி அனுப்பப்படுவர்- கலெக்டர்
மதுரை:
வெளி மாநிலங்களில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து செல்லும் விமான பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் வினய் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் மற்றும் மதுரைக்கு வரும் பயணிகள் ஆகிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை அவர்கள் இரண்டு நாட்கள் தனிமை முகாமில் வைக்கப்படுவார்கள்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள், தனி நபர் மட்டும் இன்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.
இதன் வாயிலாக அவர்கள் சம்பந்தப்பட்ட பயணிகள் உடல்நலம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஒரு சிலர் ஒத்துழைப்பது இல்லை. ஆனால் பலரும் எங்களின் சோதனைக்கு உட்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லியில் இருந்து சமீபத்தில் பெங்களூருக்கு வந்த பெண் கொரோனா பரிசோதனைக்கு உட்பட மறுத்ததால், அவர் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அதே மாதிரியான சூழ்நிலை உருவாகும் படி யாரும் நடந்து கொள்ளக்கூடாது.
அவ்வாறு கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.