செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்ட காட்சி.

அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைப்பு

Published On 2020-05-25 02:40 GMT   |   Update On 2020-05-25 02:40 GMT
அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைக்கப்பட இருப்பதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.யை அ.தி.மு.க. அரசு கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய தி.மு.க. சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

“பசிப்பிணியைப் போக்கி, பட்டினிச் சாவினைத் தடுத்திடும்” தி.மு.க.வின் “ஒன்றிணைவோம் வா” என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கும், செயலாக்கத்திற்கும், தமிழக மக்கள் அளித்த அமோக வரவேற்பையும், ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாமலும், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திலும், குறைபாடுகளினாலும், குளறுபடிகளினாலும், முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியிலும் குரோதத்திலும், தி.மு.க. தொண்டர்கள் மீதும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், பொய் வழக்குப்போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது கொரோனா ஊழல் புகார் அளித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கொரோனா காலத்திலும் அவசரமாக அதிகாலையில் கைது செய்தது; “ஏன் ஆய்வு கூட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை” என்று கேட்டதற்காக கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது மாவட்ட கலெக்டரை புகார் கொடுக்க வைத்து, வழக்குப் பதிவு செய்தது; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்களைத் தட்டிக்கேட்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மீதும், கோவை திருப்பூர் பகுதிகளில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மீதும் போலீசை ஏவிவிட்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்வது; கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தியை கைது செய்தது; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பதிவிட்டதற்காக தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் 5 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது; இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் காவல்துறையை தமது மனம்போன போக்கில் பயன்படுத்தி, தி.மு.க.வினர் மீதும், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி பொய் வழக்குப் போட்டு கைது செய்வது என்ற இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, அராஜகச் செயல்கள் என்பதை விட கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும் தடுக்கும், அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

கொரோனா காலத்தில், டெண்டர் ஊழல்கள், கொரோனா மருத்துவ உபகரணங்கள், கிருமிநாசினிகள், உள்ளிட்ட மருந்துகள் கொள்முதல்களில் ஊழல்கள் என்று ஒவ்வொரு நாளும் கஜானாவைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் அமைச்சர்களால், தி.மு.க.வின் ஜனநாயகப் பணிகளை பேரிடரில் இருந்து மக்களைக் காக்கும் மனிதகுலத்திற்கான பணிகளை, சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாமல், தணலில் இட்ட புழுக்களாய்த் துடிக்கிறார்கள்.

மக்களுக்கு அன்னமிடும் கைகளுக்கு, மதோன்மத்தர்கள் விலங்கிடப் புறப்பட்டுள்ளார்கள். அதனால் அ.தி.மு.க.வினரையும், ஏன், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோரையும் கூடப் பயன்படுத்தி, தி.மு.க.வினருக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டி காவல்துறையைக் கட்டவிழ்த்து விட்டு, அடக்குமுறை மூலம் காட்டாட்சி நடத்திவிட முடியும் என்று கனவு காண்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா தோல்விகளையும், கொரோனா ஊழல்களையும் திசை திருப்பி, தி.மு.க.வின் “ஒன்றிணைவோம் வா” என்ற எழுச்சி ஊட்டும் மக்கள் நிகழ்ச்சியைத் தடுத்திடும் வகையிலும் களங்கப்படுத்திடும் முறையிலும் செயல்படும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனிமேலும் தி.மு.க. பொறுத்துக்கொள்ள முடியாது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது.

இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ அச்சுறுத்தலுக்கோ இந்த இயக்கம் என்றைக்கும் அஞ்சாது. இந்த இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொரு தொண்டரையும் காப்பாற்றிடும் பொருட்டு, தி.மு.க. நேரடியாகக் களம்காணும் மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும் என்று இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கிறது.

அ.தி.மு.க. அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் தி.மு.க. தொண்டர்களை அடக்குமுறையில் இருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும்; அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
Tags:    

Similar News