செய்திகள்
டாஸ்மாக் கடை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு

Published On 2020-05-15 11:49 GMT   |   Update On 2020-05-15 17:15 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகிறது.

• உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதில் எந்த சமரசமும் வேண்டாம்.

• கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது.

• மது வினியோக கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும்.

• சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை.
Tags:    

Similar News