செய்திகள்
திருமாவளவன்

மக்களை பாதுகாக்க நிவாரணங்களை உடனடியாக மத்திய-மாநில அரசு அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2020-04-16 09:12 GMT   |   Update On 2020-04-16 09:12 GMT
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை உடனடியாக மத்திய மாநில அரசு அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மக்களுக்கான நிவாரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. பேரிடர் காலத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் போன்ற அறிவுரைகளையே மீண்டும் கூறியுள்ளது. மக்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பட்டினியால் செத்துவிடுவோம் எனப்பயந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பையிலும், சூரத்திலும் வீதியில் இறங்கிக் குரலெழுப்பத் தொடங்கிவிட்டனர். செவிலியர்கள் தமது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உச்சநீதி மன்றத்துக்குச் சென்றுள்ளனர்.

உலகில் மிகக்குறைவாக சோதனை செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. பத்து லட்சம் பேரில் சுமார் 150 பேருக்குத்தான் இங்கு சோதனை செய்யப்படுகிறது. பரந்துபட்ட அளவில் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆர்டிபிசிஆர் உபகரணங்களும் , ‘ஆன்டி பாடி டெஸ்ட்’ ரேபிட் டெஸ்டிங் கருவிகளும் தேவை. அவற்றை மாநில அரசுகளையும் வாங்க விடாமல் தானும் வாங்கித் தராமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது. இதனால் நோய்த்தொற்று பரவி உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசும் மாநில அரசும் இனியும் காலந்தாழ்த்தாமல் மக்களைப் பாதுகாப்பதற்கான போதிய நிவாரண அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News