செய்திகள்
கொள்ளை

தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் ரூ.30 லட்சம் நகைகள்

Published On 2020-04-03 09:20 GMT   |   Update On 2020-04-03 09:20 GMT
தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது59). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது 2மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒருவர் தூத்துக்குடியில் தனியாகவும், மற்றொருவர் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர்.

இதனால் வின்சென்ட் மற்றும் அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்து வந்தனர். அவரர்கள் இருவரும் வழக்கம்போல நேற்றுஇரவு தங்களது வீட்டில் உள்ள ஒரு படுக்கையறையில் படுத்து தூங்கினர். அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மாத்திரை உண்டு அயர்ந்து தூங்கினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் விழித்தெழுந்த வின்சென்ட், வீட்டின் முன்பக்கம் உள்ள அறைக்கு செல்வதற்காக தான் படுத்து தூங்கிய அறைக்கதவை திறக்க முயன்றார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அறைக்கதவை உடைத்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ வைக்கப்பட்டிருந்த அறை திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100பவுன் தங்கநகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.30லட்சம் ஆகும்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

யாரோ மர்மநபர்கள் தம்பதியினர் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, நள்ளிரவு நேரத்தில் வின்சென்ட் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். பின்பு முன்பக்க கதவை பக்கவாட்டு வழியாக கையைவிட்டு திறந்து வீட்டினுள் புகுந்துள்ளனர்.

பின்னர் வின்சென்ட் தம்பதியினர் படுத்திருந்த அறைக்கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, மற்றொரு அறைக்கு சென்று பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவஇடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய், அங்கிருந்து அருகே உள்ள மாதாநகர் வரையில் ஓடிச்சென்று விட்டு நின்றது. தடயவியல் நிபுணர்கள் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை நடந்த வின்சென்ட் வீடு மற்றும் அதே தெருவில் உள்ள சிலரது வீடுகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக இருந்த தம்பதி வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News