செய்திகள்
தனிமைப்படுத்துதல்

கும்பகோணம் நபருக்கு கொரோனா சிகிச்சை அளித்த 5 செவிலியர்கள் தனிமை

Published On 2020-03-30 08:01 GMT   |   Update On 2020-03-30 08:01 GMT
கும்பகோணத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த 5 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது ஆண் ஒருவர் கடந்த 18-ந்தேதி அன்று மேற்கிந்தியதீவு நாட்டில் இருந்து கும்பகோணத்திற்கு வந்தார்.

இவர் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டதால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதைத்தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் தனிமையில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதை அடுத்து அவருடன் இருந்த உறவினர்கள் மற்றும் அவரை சந்தித்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் முன்னதாக கும்பகோணத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த 5 செவிலியர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News