செய்திகள்
பாளை சீவலப்பேரி சாலையில் மீன் கடையில் திரண்ட கூட்டம்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சி- மீன் கடைகளில் குவிந்த மக்கள்

Published On 2020-03-29 11:22 GMT   |   Update On 2020-03-29 11:22 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் இறைச்சி- மீன் கடைகளில் குவிந்தனர். சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

நெல்லை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தார்போல் ஏப்ரல் 14-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மளிகை மற்றும் காய்கனி கடைகள், காய்கனி சந்தைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே காய்கனிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று காய்கனிகள் வாங்கி சென்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தையில் செயல்பட்ட கடைகள் பூங்கா, விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. நெல் லையில் உழவர்சந்தைகள் அனைத்தும் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டன.

அங்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையாக வட்டமிடப்பட்டது. அதற்குள் நின்று மக்கள் காய்கனிகளை வாங்கி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்கெட் மட்டுமின்றி ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கும் மக்கள் அதிக அளவில் செல்வார்கள். அதேபோல் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதிகளுக்கு சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் வாகனத்தில் சென்றபடி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியபடி இருந்தனர்.

Tags:    

Similar News