செய்திகள்
தனிமைப்படுத்துதல்

விருதுநகர் மாவட்டத்தில் 158 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Published On 2020-03-26 08:16 GMT   |   Update On 2020-03-26 08:16 GMT
விருதுநகர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 158 பேர் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வெளிநாட்டில் இருந்து வந்த 158 பேர் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தனிமைப்படுத்தல் குறித்து அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் அடையாளம் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களில் யாரோனும் விதிமுறைகளை மீறி வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பு முகாமில் இருந்த விருதுநகர் மாவட்டம், பாவாடியைச் சேர்ந்த லாரி டிரைவர் அழகர் என்பவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அழகரை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தினர்.

ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் நேற்று வரை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வந்த நிலையில், இன்று முதல் அரசு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தேவையின்றி பயணங்களை மேற்கொள்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் கெடுபிடி சில இடங்களில் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

குறிப்பாக விருதுநகர் மார்க்கெட்டில் போலீசாரின் கெடுபிடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சில இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவையொட்டி சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்கு அம்மா உணவகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News