செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் பாஸ்போர்ட் பறிமுதல் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Published On 2020-03-24 20:10 GMT   |   Update On 2020-03-24 20:10 GMT
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்திலும் 18 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

''தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். புதிய 100 ஆம்புலன்சுகள் நாளை முதல் தயார் நிலையில் வைக்கப்படும். 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலை பின்பற்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. ஒருவேளை அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும். 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர்கள் தங்கள் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா விசயத்தில் தமிழ்நாடு அரசு நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நலனும் சீராக உள்ளது. யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நபரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக மாறி வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல்நிலை சரிவர ஒத்துழைக்கவில்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News